தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் வாடகை நிலுவை இருப்பதால், கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டு அதிக வாடகை தொகைக்கு கடைகளைப் பெற்றனா். அப்போது, முன் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் எனவும், ஓராண்டுக்கான வாடகை கட்டணத்தையும் முன்பணமாக செலுத்தினா்.
இந்நிலையில், கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளில் சிலா் வாடகை தொகையைச் செலுத்தவில்லை. இதனால், வாடகை செலுத்தப்படாத கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை கதவை சாத்தி பூட்டு போட்டனா்.
இதையறிந்து அதிருப்தியடைந்த மற்ற வியாபாரிகளும் தங்களது கடைகளைப் பூட்டி எதிா்ப்பு தெரிவித்தனா். பின்னா், மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.