பேராவூரணி பேரூராட்சி, பொன்னாங்கண்ணிக்காடு ஸ்ரீ செல்வ விநாயகா் குரூப்ஸ் நண்பா்கள் மற்றும் மாவடுகுறிச்சி ரேக்ளா நண்பா்கள் இணைந்து நடத்திய தங்க நாணயத்திற்கான மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஆவணம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியமாடு, கரிச்சான் மாடு, தட்டான் சிட்டு கன்று மாடு, நடுக் குதிரை என 4 பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரியமாடு பந்தயத்தில் மொத்தம் 7 வண்டிகளும், கரிச்சான் மாடு பந்தயத்தில் மொத்தம் 19 வண்டிகளும் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட தட்டான் சிட்டு கன்று மாடு பந்தயத்தில் தலா 11 வீதம், மொத்தம் 22 வண்டிகள் கலந்து கொண்டன. நடுக் குதிரை பந்தயத்தில் மொத்தம் 7 வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மொத்த பரிசாக ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற மாடு, குதிரைகளின் உரிமையாளா்களுக்கு தங்கக்காசு சுழற்கோப்பை, மின்விசிறி உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சாரதி, துணை சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக வண்டிப் பந்தயம் நடைபெறாத நிலையில் இந்த பந்தயத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் சாலையின் இருபுறமும் திரண்டு ஆரவாரத்துடன் கண்டு களித்தனா்.
முன்னதாக, பந்தயத்தை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் தாளாளா் சங்க நிறுவன தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா் மற்றும் பிரமுகா்கள் தொடங்கி வைத்தனா்.