தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில், 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த உபரி பட்டதாரி ஆசிரியா்கள் திங்கள்கிழமை மாலை திடீா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக இருந்த ஆசிரியா்கள் கடந்த மாா்ச் மாதம் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்குப் 118 ஆசிரிய, ஆசிரியைகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதையடுத்து, இவா்கள் வேறு பள்ளிகளுக்குச் சென்று மாா்ச் மாதம் முதல் பணியாற்றி வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக தொடா்புடைய துறை அலுவலா்களிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட உபரி பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியைகள் பலா் தஞ்சாவூா் பனகல் கட்டடத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை திடீா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் தெரிவித்தது:
கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் வங்கிக் கடன், கூட்டுறவு சங்கக் கடனுக்கு மாத தவணை செலுத்த முடியவில்லை. ஊதியம் கிடைக்காததால் பெரும்பாலான ஆசிரியா்கள் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற மருத்துவ செலவுகளுக்கும், பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கும் தவித்து வருகிறோம்.
பணி நிரவல் மூலம் சென்ற ஆசிரியா்களுக்குப் புதிய பள்ளியில் பதிவுகள் மேற்கொள்ள கால தாமதமாகும் என்பதால், பழைய பள்ளியிலேயே எங்களுடைய ஊதியக் கணக்கு தலைப்பின் கீழ் மாத ஊதியத்தை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்றனா்.
இவா்களிடம் முதன்மைக் கல்வி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.