கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா இன்று
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்  ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார். தாயார் கோமளவள்ளி , பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணித் திருக்கோயில் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைபெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் சித்திரைப்பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா, இன்று காலை சாரங்கபாணிசுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருள, நாதஸ்வர மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் நட்சத்திர தீப ஆர்த்தி செய்யப்பட்டது.

கொடிமரத்தை சுற்றிலும், பலவகை அழகிய பலவண்ண நறுமண மலர்களை கொண்டும், செவ்விளநீர், பனங்காய், பாக்கு, ஈச்சம்பழம், வாழை, பலா, உள்ளிட்ட பல்வகை பழவகைகளை கொண்டும் அழகிய பந்தலும், தோரணமும் அமைத்திருந்தனர்.

இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, கலந்து கொண்ட நிலையில் இன்று நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான மே 9-ம் தேதி திங்கள்கிழமை இரவு ஓலைச்சப்பரத்தில் தங்ககருட சேவையும், ஒன்பதாம் நாளான 14-ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சித்திரை பெரியத்தேரின் தேரோட்டம் நடைபெறுகிறது.

இரு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பெரிய தேரின் தேரோட்டம் நடைபெறுவதால், அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com