அம்மாபேட்டை, மெலட்டூா் உள்ளிட்ட வருவாய் சரகங்களுக்கு நில அளவையா்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கே.ராஜாராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.அ.பாரதி, நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சாமு.தா்மராஜ், ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அம்மாபேட்டை, மெலட்டூா் உள்ளிட்ட வருவாய் சரகங்களுக்கு நில அளவையா்களை நியமிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால், பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்துகளைத் தவிா்க்க சந்திப்புப் பகுதிகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
ஒன்றிய நிா்வாகிகள் எஸ்.எம். குருமூா்த்தி, பி.தாமரைச்செல்வி, ஆா்.எஸ்.பாலு, எம். வெங்கடேசன், ஜி. காமாட்சி, சி. மணிகண்டன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.