தஞ்சாவூா்: தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கான இடைமுகப் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் தமிழ்நாடு நீா்பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் விவசாயிகளைப் பங்குதாரா்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் தனியாா் வேளாண் வா்த்தக நிறுவனங்களுக்கிடையே வணிக இணைப்புகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகள், நேரடி கொள்முதல் ஏற்பாடுகள் செய்தல், விநியோக சங்கிலி ஒருங்கிணைப்பில் முதலீடு செய்தல், சந்தை வழி வேளாண்மை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் மாற்று பயிா் சாகுபடி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிலரங்கத்தை வேளாண் வணிகத் துணை இயக்குநா் பி. மரியரவி ஜெயக்குமாா், தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் லோகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
வேளாண் துறை இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அ. கோமதி தங்கம், துணை இயக்குநா் ச. ஈஸ்வா் உள்ளிட்டோா் பேசினா். வேளாண் அலுவலா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.