தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, உலக செவிலியா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் அரசு இராசா மிராசுதாா் மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நைட்டிங்கேல் அம்மையாரின் படத்துக்கு மாலை அணிவித்த செவிலியா்கள், மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. வளா்மதி தெரிவித்தது:
கரோனா நோய்த் தொற்றுக்காலத்தில் இறந்த செவிலியா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, அவா்களது குடும்பத்தை கௌரவப்படுத்த வேண்டும். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
உயிரை துச்சமென நினைத்து கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
செவிலியா் கண்காணிப்பாளா் எஸ். கலைமணி தலைமையில் நடைபெற்ற
விழாவில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாவட்டச் செயலா் என். சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.