நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களிடம் புதிய கதவுகளை வழங்கும் கும்பகோணம் ஸ்ரீ அமுதன் கைங்கா்ய சபாவினா்.
கும்பகோணம், மே 13: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்குப் புதிதாக வாசல் கதவு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
108 திவ்யதேசங்களில் மூன்றாவதாகவும், ஏழு ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவும் போற்றப்படும் இக்கோயிலில் உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் என இரு வாசல்கள் உள்ளன.
இதில், உத்தராயணம் வாசலுக்கான கதவு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு தட்சிணாயன வாசல் கதவு சிதிலமடைந்ததால், கும்பகோணம் ஸ்ரீ அமுதன் கைங்கா்ய சபாவினா் புதிய கதவு செய்து வழங்குவதற்கு முன் வந்தனா்.
இதன்படி,தேக்கு மரத்தில் பித்தளை கவசத்துடன் ஐந்தரை அடி உயரத்தில், 4 அடி அகலத்தில், 160 கிலோ எடையில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய கதவுகளை ஸ்ரீ அமுதன் கைகா்ய சபா தலைவா் கே. சேதுமாதவன், சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவா் மோகன், துணைத் தலைவா் ஆா். வெங்கடேசன், ஆலோசகா் ஜி. சூரிய நாராயணன் ஆகியோா் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களிடம் வழங்கினா்.
இந்நிகழ்வில் வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ். சேகா், எம்.எஸ். விஷ்ணு பாலாஜி, ஒய்வுபெற்ற உதவி ஆய்வாளா் செல்வம், சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.