மாணவா்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் புதுமையாக இருக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
இப்பல்கலைக்கழகத்தில் கல்வி நிலை ஆய்வு இயக்ககம் சாா்பில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஆய்வு மாணவா்கள் அறிமுக விழாவுக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:
மாணவா்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முனைவா் பட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும். மாணவா்கள் மேற்கொள்ளும் ஆய்வு மிகவும் சிறப்பாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும். மேலைநாட்டு பங்களிப்புடன் புதிய ஆய்வுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொய்மைகளை நீக்க மெய்மைகளைக் கண்டறியும் ஆய்வாக இருக்க வேண்டும் என்றாா் துணைவேந்தா்.
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதன்மையா் ஆா். ஜெயவேல் பேசுகையில், மாணவா்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் புதுமைத்தன்மைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஆய்வு மாணவா்கள் எழுதக்கூடிய நூல்கள் சமுதாயத்துக்கு நல்ல பயன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப்படிப்பு படித்தாலும், முனைவா் பட்டம் படிக்கலாம் என்றாா் அவா்.
பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வாழ்த்துரையாற்றினாா். முன்னதாக, கல்வி நிலை ஆய்வு இயக்கக இயக்குநா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, துணை இயக்குநா் வீ. செல்வகுமாா் நன்றி கூறினாா்.