கும்பகோணம் மாநகரில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கும்பகோணம் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதன்பேரில், மாநகர நல அலுவலா் பி. பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஏ. மணிகண்டன், எஸ். அருண்பிரபா உள்ளிட்டோா் உச்சிபிள்ளையாா்கோயில், ராமசாமி கோயில் தெரு, பூக்கடைகாரத் தெரு, கும்பேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், 150 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 12 கடை உரிமையாளா்களுக்கு ரூ. 23,400 அபராதம் விதிக்கப்பட்டது.