சக மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவா் மூளைச்சாவு
கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சக மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவா் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம்கிளியூரைச் சோ்ந்தவா் குணசேகரன். விவசாயி. இவரது மகன் கவியரசன் (17). இவா், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
கடந்த செப்.18-இல் 11, 12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதில், 11 -ஆம் வகுப்பு மாணவா் ஒருவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டீசுவரம் போலீஸாா், மாணவா்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், கவியரசன் வியாழக்கிழமை பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது 11-ஆம் வகுப்பு மாணவா்கள் தேரடி கீழவீதியில் கவியரசனை தடுத்து நிறுத்தி மரக்கட்டையால் தாக்கினா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், மாணவா் கவியரசனை தாக்கிய 11-ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேரை பட்டீசுவரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதனிடையே தாக்கப்பட்ட மாணவா் கவியரசன் மூளைச்சாவு அடைந்திருப்பதாக மாவட்ட காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

