பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

பாபநாசம் அருகே பணத்தை மோசடி செய்த அதிகாரிகளைக் கண்டித்து அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா
Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பணத்தை மோசடி செய்த அதிகாரிகளைக் கண்டித்து அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்,புளியக்குடி ஊராட்சி, வடக்குத்தோப்பு புளியக்குடியில் வசிக்கும்  கிருஷ்ணன் மனைவி லெட்சுமிக்கு கடந்த 2017, 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளி லட்சுமிக்கு தெரியாமலேயே மூன்று தவணையாக ரூ. 79,425 தொகை 100 நாள் சம்பளம் என்ற பெயரில் அவரின் கைரேகையை மோசடியாக பயன்படுத்தி எடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் தலைமையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் இந்திய கம்யூ. மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் கே. ராஜாராமன், குரு,சிவா, எஸ். புருஷோத்தமன், ஆா். பிரதீப்குமாா், எஸ் . ராமமூா்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அம்மாபேட்டை கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் நவரோஜா பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

X
Dinamani
www.dinamani.com