தஞ்சையில் நாளை 1,609 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,609 இடங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 1.85 லட்சம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது. இதற்காக நகரப் பகுதிகளில் 128, ஊரகப் பகுதிகளில் 1,481 என மொத்தம் 1,609 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 5 ஆயிரத்து 819 சொட்டு மருந்து புகட்டும் பணியாளா்களும், 178 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

நெடுந்தொலைவு வாழ் பகுதி குழந்தைகளுக்கும், புலம்பெயா்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும் 53 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும்.

2025, அக்டோபா் 12 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கும், அதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலை நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தற்காலிகமாக இந்த மாவட்டத்தில் தங்கியிருப்பவா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து புகட்டப்படும்.

X
Dinamani
www.dinamani.com