நெல் கொள்முதலை விரைவுபடுத்தக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
ஒரத்தநாடு: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதூரில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒரத்தநாடு புதூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், சாலையோரங்களில் சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு நெல்லை விவசாயிகள் குவித்து வைத்து காத்துள்ளனராம். இந்நிலையில், கடந்த அக். 9-ஆம் தேதி, உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி, புதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து, விரைந்து நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டுச் சென்றாா். ஆனால், அமைச்சா் வந்துவிட்டு சென்ற பிறகும் நிலைமை மாறவில்லையாம். நாள்தோறும் ஆயிரம் மூட்டைகளுக்கும் குறைவாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் முறையான பதில் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் ஒரத்தநாடு மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில், புதன்கிழமை ஒரத்தநாடு புதூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் மற்றும் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நாள் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
