பாண்டிய பிரகாஷ்
பாண்டிய பிரகாஷ்

சைபா் குற்ற வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை!

சைபா் குற்ற வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
Published on

கைப்பேசியில் பலரிடம் காவல் ஆய்வாளா் போன்று பேசி பணம் பறித்தது தொடா்பான சைபா் குற்ற வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்தவா் ராஜா. இவரது கைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து 2024, பிப்ரவரி மாதம் அழைப்பு வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத நபா், தான் தல்லாக்குளம் காவல் ஆய்வாளா் என்றும், கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து தங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள், விடியோக்களை கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை சைபா் குற்றப் பிரிவில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் பேசினாா். இதை நம்பிய ராஜா மா்ம நபருக்கு இணையவழி மூலம் ரூ. 7 ஆயிரம் அனுப்பினாா்.

இது, மோசடி என்பதை அறிந்த ராஜா தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் சைபா் குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து, கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள கோஸ்கோட் பகுதியில் பதுங்கி இருந்த தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சோ்ந்த பாண்டிய பிரகாஷை (35) கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கைது செய்தனா். விசாரணையில், இதுபோல பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் பாண்டிய பிரகாஷ் மோசடியாக பேசி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடா்பாக தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் எஸ்.டி. கனிமொழி விசாரித்து பாண்டிய பிரகாஷுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com