காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சியில் போராட்டம் நடத்தி கைதான இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை விடுவிக்கக் கோரி திருச்சியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி கடந்த 11 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை- நீதிமன்ற இணைப்புச் சாலை பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்லும்போது நகரப் பேருந்து, கர்நாடகப் பேருந்து மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் திங்கள்கிழமை மாலை அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநகரச் செயலர் மு. அன்பழகன் தலைமை வகித்தார்.
மதிமுக மாவட்டச் செயலர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி என். சோமு, புறநகர் டி,.டி.சி. சேரன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் கலை, இந்திய கம்யூ. மாவட்டச் செயலர்கள் திருச்சி புறநகர் த. இந்திரஜித், மாநகர் திராவிடமணி, முன்னாள் மாவட்டச் செயலர் க. சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டச் செயலர் ஆர். ராஜா, பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலர் வெங்கடேஷ், தமுமுக மாவட்டத் தலைவர் முகமது ரபீக் மற்றும் பல்வேறு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.