திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக திருவாராதன் மண்டபத்தில் இருந்த பெருமாளுக்கு ஸ்ரீவிஷ்ணு வராயணம் மற்றும் திருப்பாவை சாற்று முறைகள் நடைபெற்று முடிந்த பின் பரமபதவாசல் வழியாக வரதராஜ பெருமாளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா.. எனும் கோஷம் முழங்க கோயிலை உலா வந்த பின் வசந்த மண்டபத்தை வந்தடைந்தனர். பின் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஒரே இடத்தில் காட்சி தந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளுக்குப்பின் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் அருள்மிகு ஸ்ரீ நல்லாண்டவர் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி சுவாமி புறப்பாடு, வையம்பட்டி அடுத்த தட்டாரபட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி: தொட்டியம் அடுத்த திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த 10 நாள்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவந்த நிலையில், கோயிலின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், மூலவர் பரமபத வாசல் வழியாக வந்து பொதும்ககளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் பரமபத வாசல் வழியாக சென்று மூலவரான வேதநாராயண பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.