திருச்சி புத்தூர் அக்ரஹாரத்திலுள்ள ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் உற்ஸவர் சிலைகளை மாற்றக்கூடாது எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேசுவர சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது புத்தூர் அக்ரஹாரத்திலுள்ள ஆதிவராகப் பெருமாள் கோயில். இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணர், அனுமான் உள்ளிட்ட சுவாமிகளின் உற்ஸவ சிலைகள் ஐம்பொன்னால் ஆனவை. மிகவும் பழைமையான இந்த சிலைகளுக்குப் பதிலாக, உபயதாரர் ஒருவர் புதிய சிலைகளை வழங்குவதாகக் கூறியிருந்தாராம்.
திருக்கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், கோயிலில் தற்போதுள்ள ஐம்பொன்னால் ஆனஉற்ஸவர் சிலைகளே இருக்க வேண்டும்.
புதிய சிலைகளை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, திருக்கோயில் செயல் அலுவலர் அருண்பாண்டியனிடம் மனு அளிக்க புதன்கிழமை அவரது அலுவலகத்தில் சென்றனர். அவர் அலுவலகத்தில் இல்லாததால் அங்குள்ள பணியாளர்களிடம் கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்துவிட்டுச் சென்றனர்.