திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்தது. குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால் கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை முதலே திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமில்லை. இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்கு மேல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சுமார் 10 நிமிஷங்கள் வரை பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாநகரில் கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், தில்லைநகர், மத்திய பேருந்து நிலையம், ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் வாகனங்களில் சென்றோர் சிறிது நேரம் தவிப்புக்குள்ளாகினர். மாநகரைப் போன்று புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.