திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவரை செவிலியர் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தினமும் 4,000 பேர் வரை புற மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவர்களுடன், மருத்துவப் படிப்பை முடித்து, ஓராண்டு பயிற்சியிலுள்ள பயிற்சி மருத்துவர்களும் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ஒருவரை அங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்த பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வெளியேறி, கட்டடத்தின் நுழைவுவாயில் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர். மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான கையுறைகள், சிரஞ்சுகள், வலி ஊசிகள், மருந்துகள் போன்றவை தேவையான அளவில் இல்லை என்றும், இருக்கும் மருத்துவப் பொருள்களை செவிலியர்கள் பூட்டி வைத்துக் கொள்வதாகவும், இதை கேட்டால் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்கல்லூரி முதல்வர் அனிதா, பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.