திருச்சி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள், முன்னேற்பாடு தடுப்புப் பணிகள், மருந்துகளின் இருப்பு போன்றவை குறித்து மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வகையில், 32 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலராக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சேவை கூடுதல் இயக்குநர் டாக்டர் சுவாதி ரத்தினாவதி நியமிக்கப்பட்டிருந்தார். இவர், வெள்ளிக்கிழமை முதல் தனது ஆய்வுப்பணியை திருச்சி மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் தொடங்கினார்.
துறையூர் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சுவாதி ரத்தினாவதி, அங்குடெங்கு, பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எவ்வளவு பேர், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள் போன்றவை குறித்து அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அருகிலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மருத்துவமனைகள் போன்றவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வை மேற்கொள்ளஉள்ளார்.
மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போன்றவை தேவையான அளவில் கையிருப்பில் உள்ளதா, அனைத்து உணவகங்கள்,சினிமா திரையரங்குகள், மருத்துவமனைகள், சூப்பர்மால்கள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டதா, அவ்வாறு நடத்தப்பட்டிருந்தால் அதற்கான விவரங்கள், மருத்துவமனைகளில் ஹவுஸ்கீப்பிங் பணிகளில் ஈடுபடுவோர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புநடவடிக்கைகள், அதற்கான விவரங்கள் போன்ற பல்வேறு பணிகள் குறித்த விவரங்களை ஆய்வின் போது பெற்றுக் கொள்ளும் கண்காணிப்பு அலுவலர், அதை அரசுக்குஅறிக்கையாக அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.