அறம் செய், அது உன்னை காக்கும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மேஜர் எஸ். மணலி சோமசுந்தரம்.
எஸ்ஆர்எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற மகாகவி பாரதியார் தமிழ் மன்றத் தொடக்கவிழாவில் பங்கேற்று, எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்ற தலைப்பில் அவர் பேசியது: நினைத்ததை நினைத்தப்படி ஈடற்ற, வாழ்வில் வெற்றியடைய வேண்டும் எனில் உறுதி வேண்டும். ஆனால், அந்த உறுதி மட்டும் இருந்துவிட்டால் போதாது.
உறுதியோடு தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் வேண்டும். இந்த குணங்களுடன் செயல்பட்டால் எல்லா நிலையிலும் வெற்றி பெறலாம். அறம் செய், அது உன்னைக் காக்கும் என்றார் சோமசுந்தரம்.
இதைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் கே. சிவசாமி இன்றைய இளைஞர்கள் எங்கே செல்கின்றனர் என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையில், மாணவர்கள் தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தாமல், எவ்வாறு ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி, வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றார்.
இந்த விழாவுக்கு எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சி கல்வி வளாகத்தின் தலைவர் முனைவர் ஆர்.சிவகுமார் தலைமை வகித்தார். எஸ்ஆர்எம் திருச்சி கல்வி வளாக இணை இயக்குநர் (நிர்வாகம்) என். பாலசுப்பிரமணியன், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ. ஜேசுதாஸ், கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் ஜி. இளங்கோ, டிஆர்பி பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ். மாலிக்ராஜ், ஐ.எச்.எம். முதல்வர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை மு. சரிதா தினகரன் சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையாற்றினார்.
பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.