திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 155 பேருக்கு பணிநியமன ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், வேலையளிக்கும் 14 நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் 3 பயிற்றுநர்கள், வேலைதேடும் இளைஞர்கள் 350 பேர் கலந்து கொண்டனர். இதில், 155 பேருக்கு பணிநியமன ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி மாணவர்களுக்கான இலவச பாடக்குறிப்பு கையேடுகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கையேடுகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் ஆ. அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் வெ. சுப்பிரமணியம், உதவி இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.