மணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சி கருத்தகோடாங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்தாததைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க வட்ட துணை செயலாளர் கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் போரட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பி.பாலு, முன்னாள் வட்டச் செயலாளர் கண்ணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருண் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் மனுவை மாட்டிடம் கொடுத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் கல்வியாண்டில் பள்ளி தரம் உயர்த்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அய்யாவு, சங்கர் ராஜ், ஆவா, இளையராஜா, பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.