திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வணிகவியல்துறை உயராய்வு மையம் சார்பில், வணிகவியலும்-மேலாண்மையும்- சிக்கல்களும்- தீர்வுகளும் என்ற மையக் கருத்தைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் டி. கிறிஸ்டி செல்வராணி தலைமை வகித்தார்.
முதல் அமர்வில் வணிகவியல்துறையில் தற்போது உள்ள பிரச்னைகளும், தீர்வுகளும் குறித்து ஆய்வு செய்து எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஏ. தமிழரசும், மேலாண்மையில் உள்ள பிரச்னைகளும் தீர்வுகளும் குறித்து திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் இணைப் பேராசிரியர் என்.ரம்யாவும் பேசினர். மேலும், இந்த கருத்தரங்கில் சேவைவரி, பங்குச்சந்தை, தொழில்முனைவோர் வளர்ச்சி, ஆன்லைன் வணிகம் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் ஆராயப்பட்டன. முன்னதாக துறைத் தலைவர் டி. ஜேனட் ராஜகுமாரி வரவேற்றார்.கருத்தரங்கில் வணிகவியல் மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.