திருச்சி மாவட்டம், வாய்த்தலை அணைக்கட்டு பகுதியில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை இரவு பெய்த மழை சற்று வெப்பத்தை தணித்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கோடைகாலத்தில் உள்ளது போன்று திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாகவே காணப்பட்டது. அதிலும், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அக்னி நட்சத்திரக் காலத்தில் உள்ளதுபோன்று வெயிலின் தாக்கம் காணப்பட்டதால் மக்களின் நடமாட்டம் பகலில் சற்று குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் இடி- மின்னலுடன் மாநகரப் பகுதிகளில் மழை பெய்தது. அதிகளவில் மழை பெய்யவில்லை என்றாலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்திருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையளவு விவரம் ( மி.மீட்டரில்): வாய்த்தலை அணைக்கட்டு- 67 மி.மீ, புள்ளம்பாடி- 57.60, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம்-45, நவலூர் குட்டப்பட்டு- 32.60, திருச்சி விமான நிலையம்- 25.80, லால்குடி- 14.60, பொன்மலை- 14.20, மணப்பாறை- 13, கொப்பம்பட்டி- 12, தென்பறநாடு- 11, முசிறி- 7.10, சமயபுரம்-7, தாத்தையங்கார்பேட்டை- 6, துறையூர், கல்லக்குடி- 4, தேவிமங்கலம், சிறுகுடி- 3, திருச்சி டவுன்- 2.50, திருச்சி ஜங்சன்- 1.80 மி.மீ.
மாவட்டத்தில் சராசரியாக 13.25 மி.மீ. மழையும், மொத்தமாக 331.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.