கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கிணத்துக்கடவு தாமோதரன் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வந்து, தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனை சனிக்கிழமை காலை சந்தித்து, பொன்னாடை அணிவித்து அக்கட்சியில் இணைந்தார் தாமோதரன்.
முன்னாள் அமைச்சரான இவருக்கு, அதிமுக சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விவசாய அணியில் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பதவியை ஏற்காமல் அதிமுகவிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தாமோதரன் இணைந்துள்ளார். இதேபோல், தேமுதிக சார்பில் 2011-16 ஆம் ஆண்டு வரை திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து திமுகவில் அண்மையில் சேர்ந்த சம்பத்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அதிமுக ஒன்றியச் செயலராக இருந்து வந்த சந்திரனும் அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
நிகழ்வின் போது, மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன்,
ஜெ. சீனிவாசன், ம.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.