திருச்சி: விடுதலைப் போராட்ட வீரரும், வரகனேரி சிங்கம் என போற்றப்படுவருமான மறைந்த வ.வே. சுப்பிரமணிய அய்யர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சியை அடுத்த வரகனேரியில் வ.வே.சு. அய்யர் வாழ்ந்த இல்லமானது அரசுடமையாக்கப்பட்டு, நூலகமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்த நூலகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு உதவி மையமாகவும் செயல்படுகிறது.
ஏப்.2 வ.வே.சு. அய்யரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதையொட்டி வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை வ.வே.சு. அய்யரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி கோட்டாட்சியர் க. அன்பழகன், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சண்முகவேலன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ. கார்த்திக்ராஜ் மற்றும் நூலக புரவலர்கள், வாசகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.