மணப்பாறையில் இருவேறு இடங்களில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மேலகோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் செ. சின்னத்தம்பி. இவர் கால்நடைப் பயன்பாட்டுக்காக, வீட்டின் பின்புறத்தில் வைக்கோல் வாங்கி வைத்திருந்தார்.
வெப்பத்தின் காரணமாக புதன்கிழமை இரவு வைக்கோல் போர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் சேதமடைந்த வைக்கோல் மதிப்பு ரூ.35 ஆயிரமாகும். இதுபோல, திருச்சி- திண்டுக்கல் சாலையில் ஆசாத்சாலைப் பகுதியில் சாலையோரத்தில் இருந்த தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றியது. இதில் காய்ந்து விழுந்துள்ள இலைகளில் தீ வேகமாகப் பரவி, காடு முழுவதும் எரியத் தொடங்கியது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பு உள்ள இடங்களில் தீ பரவாமல் இருக்கும் வகையில் தணித்தனர். ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. தைலமரக்காடு யாருடையது, தீப்பற்ற காரணம் என்ன என்பது தெரியவில்லை. வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.