மணப்பாறை அருகே பாதையில்லாத நீர்தேக்கத் தொட்டியை இடமாற்றம் செய்யக் கோரியும், முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரியும் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
சீகம்பட்டி பாரதியார் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதிக்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு சென்றுவர போதிய பாதை இல்லையாம். மேலும், சீரான குடிநீர் விநியோகமும் இல்லையாம்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள், நீர்தேக்கத் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து, சீரான குடிநீர் வழங்கக் கோரி புதன்கிழமை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மக்கள் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆணையர்கள் அப்பகுதிக்கு வந்து, 10 நாள்களில் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடிநீர் விநியோகம் கோரி...
மணப்பாறை நகராட்சியின் 19 ஆவது வார்டுக்குள்பட்ட புதுத்தெரு பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த்திட்ட குழாய்கள் சீரமைக்கப்படவில்லையாம். இதனால் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இப்பகுதி பெண்கள், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களை சமரசம் செய்தனர்.இதன் பின்னர் நகராட்சிப் பொறியாளர் அப்பகுதிக்கு வந்து ஓரிரு நாள்களில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.