திருச்சி மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக துணை ராணுவத்தைச் சேர்ந்த 240 வீரர்கள் வருகை தரவுள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவலர்கள், தேசிய மாணவர் படை, ஊர்க்காவல் படையினர் 1,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவைத்தவிர, காவல்துறை தரப்பில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், முதல்கட்டமாக 84 வீரர்கள் அடங்கிய துணை ராணுவத்தினர் கடந்த 17ஆம் தேதி வருகை தந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கூடுதலாக 240 பேர் வருகை தரவுள்ளனர். இவர்கள் ஆந்திர மாநிலத் தேர்தல் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு திருச்சிக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ளனர். இந்த வீரர்களை தேவையான இடங்களில் பணியமர்த்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.