திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டத்துக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செவ்வாய்க்கிழமை நடைப்பயணமாக கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாகனங்களும் மெதுவாக செல்ல நேரிட்டது.
இந்த நிலையில், பிற்பகல் 12.45 மணியளவில் கூத்தூர் பாலம் அருகே சாலையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும் சாலையில் வண்டியை நிறுத்தி தப்பினர்.
சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு கடுமையான வெயில் காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.