காவல் நிலையத்தில் புகாரைப் பெறாமல் திருப்பியனுப்பியதால், திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
திருச்சி பிராட்டியூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜ்குமார்.
ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து திருச்சி அமர்வு நீதிமன்றக் காவல் நிலையத்தில் ராஜ்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை போலீஸார் வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ராஜ்குமார் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை மாநகரக் காவல் ஆணையரகம் முன்பு தர்னாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, தர்னாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் குடும்பத்தினர் உதவி ஆணையரிடம் மனு அளித்துச் சென்றனர்.