சமயபுரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சாதி மறுப்பு திருமணம் செய்த தனது அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் ரங்கராஜூ(25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூத்தூரைச் சேர்ந்த வைத்தீசுவரி என்ற பெண் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூத்தூரிலேயே ரங்கராஜூ வசித்து வந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு ரங்கராஜூ வீட்டுக்கு அவரது தம்பி ஆனந்த் (23) திங்கள்கிழமை சென்றார். இருவரும் சேர்ந்து மது அருந்திய போது, காதல் திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது அண்ணன் ரங்கராஜூவை அரிவாளால் தலையில் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்தீசுவரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.