குடும்பத் தகராறில் தீ வைத்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி பேட்டைவாய்த்தலை அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). கட்டடத் தொழிலாளியான இவர், தனது உறவினரான ராதிகா (24) என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
குடிபழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமார் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வீட்டிற்கு வருவதில்லையாம். இதில், மனமுடைந்த ராதிகா ஏப்ரல் 15ஆம் தேதி வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.