திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்த தாய், 2 குழந்தைகள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
தாத்தையங்கார்பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் ஊருடையாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (37). கொத்தனார். இவருக்கு நாகராணி (31) என்ற மனைவியும், குணா (10) சந்தோஷ் (7) என்ற இரு மகன்களும் இருந்தனர். நாகராணி பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நாகராணி பணி முடிந்து வீடு திரும்ப தாமதமாகுமாம். மேலும், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த புதன்கிழமை (ஏப்.17) ஏற்பட்ட தகராறில் நாகராணி மனமுடைந்து காணப்பட்டாராம். இதையடுத்து, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தைகள் குணா, சந்தோஷ் ஆகியோருடன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சிறுவன் குணா நாமக்கல் மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நாகராணி, சந்தோஷ் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாத்தையங்கார்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.