திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என மாநகராட்சி உதவி ஆணையர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்தனர். அப்போது நரசிம்மலு நாயுடு தெருவைச் சேர்ந்த கோபால்ராம்(45) என்பவர், தனக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 1 டன் நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அப்பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோபால்ராமிற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.