திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ராசிப்பட்டியில் குடிநீர் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக்குடங்களுடன் துவரங்குறிச்சி - செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ராசிப்பட்டியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் முறையாக அளிக்கப்படவில்லையாம்.
இதனால் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில், குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் துவரங்குறிச்சி - செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.