பொன்னமராவதி பகுதியில் கலவரத்தை தூண்டும் வகையில் கட்செவி அஞ்சலில் தகவலை வெளியிட்டவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் செல்வகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியது :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்பில்) வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.
இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எதிர் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தவறு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் சுந்தர், சங்க துணைத் தலைவர் சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.