அடிதடி வழக்கில் ஆஜராகாமல் வெளிநாடு சென்று திரும்பிய அரியலூர் இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராமராஜன்(26). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் தூத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஜாமீனில் சென்ற ராமராஜன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மலேசியாவுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸார் ராமராஜன் திரும்பி வரும் போது உடனே தகவல் தெரிவிக்குமாறு, திருச்சி,சென்னை, மதுரை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
அதன்படி திங்கள்கிழமை மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ராமராஜனை விமானநிலைய காவல்நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி வந்த அரியலூர் போலீஸார் பாதுகாப்புடன் ராமராஜனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.