திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆணையூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி ஆணையூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி ஞாயிறன்று காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவின் ஏழாம் நாள் ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கரகம் பாலித்தல் நடைபெற்று, திங்கள்கிழமை பொங்கல், கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் - வேடபரி நிகழ்ச்சியில் அம்மன் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதி கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இரவு கரகம் களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெற்றது.