திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையத்தில் தென்னை மரம் விழுந்து கால் முறிந்த இளைஞருக்கு நிவாரணம் கேட்டு அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் சேர்ந்த ஜெயபால் மகன் தீனா (20). இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததபோது, அப்பகுதியில் இருந்த தென்னை மரம் தீனா மீது விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில், அவரது இடது கால் துண்டிக்கப்பட்டதையடுத்து, இளைஞருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அப்பகுதியினர் வருவாய்த் துறையினருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திருச்சி - சேலம் சாலையில் திடீர் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த முசிறி போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.