ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளுக்கு செவ்வாய்க்கிழமை ரூ.1 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட நெற்றிப் பட்டம் அணிவிக்கப்பட்டது. .
கேரள மாநில கோயில்களில் நடைபெறும் விழாக்களில் யானைகள் நெற்றிப்பட்டம் (முகபட்டம்) அணிந்து காட்சி தரும். யானையின் நெற்றியில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கும் நெற்றிப்பட்டம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, யானை ஆண்டாளின் நெற்றியை அளவு எடுத்து, கேரள மாநிலத்தில் கடந்த 3 மாதமாக அழகிய வடிவமைப்புடன் தென்கலை திருநாமத்துடன் ரூ. 1 லட்சம் மதிப்பில் நெற்றிப்பட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை யானை ஆண்டாளுக்கு நெற்றிப்பட்டம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, கோயில் அறங்காவலர்கள் டாக்டர் கே.என். சீனிவாசன், ரங்காச்சாரி ஆகியோர் நெற்றிப்பட்டத்தை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், அறங்காவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.