திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1 .30 கோடி வந்திருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திபெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு உள்ளூர் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்துகின்றனர்.
காணிக்கைகளை கோயில் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பெ. அசோக்குமார் தலைமையில் உதவி ஆணையர்கள் சு. ஞானசேகரன் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், சு. சூரியநாராயணன் (கரூர்), கோயில் மேலாளர் இரா. ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வலர்கள் எண்ணினர். அப்போது ரூ. 1 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 905 ரொக்கம், 2 கிலோ 362 கிராம் தங்கம், 10 கிலோ 450 கிராம் வெள்ளியும், 244 அயல்நாட்டு நோட்டுகள் இருந்ததும் தெரியவந்தது. கடந்த ஏப். 12-இல் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.47.70 லட்சம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், ரூ.47.70 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலின் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் நடைபெற்றது. இதில், ரூ.47 லட்சத்து 70 ஆயிரத்து 353 ரொக்கம், 98 கிராம் தங்கம், 578 கிராம் வெள்ளி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 267 இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, ஐயப்பா சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.