கல்வியாளர்கள் எந்தச்சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.மணிசங்கர் அறிவுறுத்தினார்.
திருச்சி காஜாமலை வளாகத்தில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் கல்வியாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் ப. மணிசங்கர் பேசியது: கல்வியாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது நாட்டின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். முக்கியமாக கல்வியாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது எச்சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பயிற்சி முகாமை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சிவசுப்பிரமணியன் முகாமை தொடக்கி வைத்தார்.தொடக்க விழாவில் இந்திய மேலாண்மைக்கழக பேராசிரியர் தீபக் கே.ஸ்ரீவத்சவா வாழ்த்துரை வழங்கினார்.பயிற்சி முகாமில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் துறைத்தலைவர்கள்,புலத் தலைவர்கள், இயக்குநர்கள் உட்பட 52 பேர் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்கலையின் மனிதவள மேம்பாட்ட மைய இயக்குநர் எஸ்.செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்றார்.