டீ கடை உரிமையாளர் வீட்டில் 4 பவுன் நகை திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன்(34). டீ கடை உரிமையாளர். இவர், திங்கள்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பூட்டிய வீடு திறக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயா(46) என்பவர் வீட்டிற்குள் இருந்துள்ளார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் தப்பியோட முயன்றவரை மடக்கி பிடித்து பொன்மலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் செந்தில்வேலன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்ற விஜயா, பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடியதும், அதன் தொடர்ச்சியாக தான் திங்கள்கிழமை வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து செந்தில்வேலன் கொடுத்த புகாரின் பேரில் விஜயாவை போலீஸார் கைது செய்தனர்.