திருவானைக்கா மேம்பாலப் பணிகள் முழுமையடையாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை தடுப்புக் கட்டைகளை அகற்றி தங்களது வாகனத்தை ஓட்டிச்சென்றனர் . இதையடுத்து, பாலத்தில் மீண்டும் தடுப்புக் கட்டைகள் அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருவானைக்கா ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கி சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் திருவானைக்கா பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். தற்போது 95 சதவிகித பணிகள் முடிவடைந்து தரை தளத்தில் தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை காலை பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புக் கட்டைகளை அகற்றி விட்டு ஆட்டோ, கார் , இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்கத் தொடங்கினர். இதையறிந்த சம்பந்தப்பட்ட துறையினர் மீண்டும் தடுப்புக்கட்டை அமைத்து பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர். வியாழக்கிழமை காலை சுமார் 11 மணிவரை போக்குவரத்து நடைபெற்றது.