துறையூர் அருகேயுள்ள கரட்டாம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கரட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் நடுமலையான் மகன் சின்னத்தம்பி(60). விவசாயி. இவர் புதன்கிழமை துறையூர் சென்றார். இவருடைய மனைவி பெரியம்மாள்(50) மற்றும் இளைய மகன் கேசவன் ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அதேப் பகுதியில் மேய்க்கச் சென்றிருந்தனர். இந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் கதவிலிருந்த பூட்டை இரும்புக் கம்பியால் உடைத்து உள்ளே சென்று இரும்பு அலமாரியில் இருந்த 7 பவுன் எடையுள்ள 3 தங்கச் சங்கிலிகளையும், 4 பவுன் எடையுள்ள மோதிரம், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகளையும், ரூ. 43000 ரொக்கப்பணத்தையும் திருடிச் சென்றனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பெரியம்மாளும், கேசவனும் கதவு, அலமாரி திறந்திருப்பதும், நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து புகாரின் பேரில் புலிவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.