திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணப்பாறை கோவில்பட்டி சாலை காமராஜர் சிலை அருகே 1998 - 99 ஆண்டின் அன்றைய குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ரெ.செல்வம் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது.
இந்த நிழற்குடை சுமார் 20 ஆண்டுகளை கடந்த பழைமையின் காரணமாக மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் எல்லாம் காரை பெயர்ந்து சிதலமடைந்து எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த பயணியர் நிழற்குடை முழுவதும் அருகே உள்ள கடைகளால் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு பயணிகள் நிற்கக் கூட இடமில்லை. பயணியர் நிழற்குடையை சுற்றிலும் தரை கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் அமைக்கப்பட்டிருப்பதால் நிழற்குடை இருப்பது கூட தெரியவில்லை.
எனவே, சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடையை சீரமைத்து தரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.