திருச்சி விமான நிலைய வளாகத்தில் ரூ. 4.64 கோடியில் சூரிய மின்உற்பத்திக்கான கட்டமைப்பு அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவுக்கு விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தலைமை வகித்தார். விமான நிலைய ஆணையக் குழும உறுப்பினர் (மனிதவளம்) அனுஜ்அகர்வால் (புதுதில்லி), புதிய சூரிய மின்உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன் கூறுகையில், இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 15.4 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விமான நிலையத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தில் சுமார் 25 சதவிகித மின்சக்தியை சூரிய சக்தி மூலம் பெற முடியும்.
அந்த வகையில் ஆண்டுக்கு மின்சிக்கனம் செய்த வகையில் ரூ.1.23 கோடி மிச்சப்படுத்த முடியும். இனி வரும் காலங்களில் இதேபோல சூரிய மின்உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
நிகழ்ச்சியின் போது, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஸ்ரீகுமார், இந்திய விமான நிலைய ஆணையக்குழும மனிதவள நிர்வாக இயக்குநர் (தில்லி) சஞ்சய்ஜெயின் மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்!
நிகழ்வை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் சார்பில், ரூ. 30 லட்சம் (தலா ரூ.15 லட்சம்) இரு அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அவற்றை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா பெற்றுக்கொண்டார். கண்காணிப்பாளர் ஏகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.